ஆத்தூர் அருகே அழகு நிலைய பெண் ஊழியர் கொலை? போலீசார் விசாரணை


ஆத்தூர் அருகே அழகு நிலைய பெண் ஊழியர் கொலை? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Dec 2019 11:15 PM GMT (Updated: 14 Dec 2019 8:05 PM GMT)

அழகு நிலைய பெண் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மல்லியக்கரை போலீஸ் சரகம் ஊராண்டி வலசு காட்டுக் கொட்டகை பகுதியில் வசித்து வருபவர் குப்புசாமி, லாரி டிரைவர். இவருடைய மனைவி சசிரேகா. இவர்களுடைய மகள் கவுசிகா (வயது 23).

இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தாலுகா தகர கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த சரவணனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 1¼ வயதான பூசிகா என்ற பெண் குழந்தை உள்ளது. சரவணன், அலுமினிய கதவுகள் செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் தனது மனைவி கவுசிகா மற்றும் குழந்தையுடன் திருப்பூர் பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்தார். கவுசிகா அதே பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கொலை செய்யப்பட்டதாக புகார்

இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக கவுசிகா தனது தந்தை வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வீட்டின் முன் பகுதியில் கவுசிகா மயங்கி கிடந்தார்.

உடனே அவரை வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கவுசிகாவின் உடல் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய பெற்றோர் மல்லியக்கரை போலீசில் புகார் கொடுத்தனர். அதில் ‘தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருக்கிறது. யாரோ அடித்து கொலை செய்து இருப்பார்கள் என்று கருதுகிறோம். மேலும் அவரது முகம், கால்களில் காயம் உள்ளது’ என தெரிவித்திருந்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இந்த புகாரை அடுத்து பெண் மர்ம சாவு என்று மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த பெண்ணுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால் ஆத்தூர் உதவி கலெக்டர் துரை விசாரணை நடத்தி வருகிறார்.

அழகு நிலையத்தில் வேலை பார்த்த பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story