கார்குடி சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


கார்குடி சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 18 Dec 2019 10:45 PM GMT (Updated: 18 Dec 2019 7:17 PM GMT)

கார்குடி சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கான தண்ணீரை கலெக்டர் ரத்னா திறந்து விட்டார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா கார்குடி கிராமத்தில் உள்ள சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கான தண்ணீரை மாவட்ட கலெக்டர் ரத்னா திறந்து விட்டார். அப்போது அவர் கூறுகையில், சித்தமல்லி நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 226.80 மில்லியன் கனஅடி ஆகும். இதில் மூன்று தலைமதகுகள் உள்ளன. தலைமதகு-1 மூலம் கார்குடி தெற்கேரிக்கும், தலைமதகு-2 மூலம் கோவத்தடை ஏரிக்கும் மற்றும் மெயின் வாய்க்காலுக்கும், தலைமதகு-3 மூலம் திருப்புரந்தான் பெரிய ஏரிக்கும் மற்றும் திருப்புரந்தான் வாய்க்காலுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு பாசன வசதி பெறுகிறது. சித்தமல்லி நீர்த்தேக்கத்தின் மூலம் நன்செய் நிலம் 1,179.02 ஏக்கரும், புன்செய் நிலம் 3,901.60 ஏக்கர் நிலமும் மொத்தம் 5,080.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையின் மூலம் நடுவலூர் (கிழக்கு), இருகையூர், காரைக்குறிச்சி, தா.பழூர், கோடங்குடி, திருப்புரந்தான், இடங்கண்ணி, சோழமாதேவி ஆகிய கிராமங்கள் பயன்பெறுகின்றன.

55 நாட்களுக்கு...

நீர்தேக்கத்திலிருந்து உபரிநீரை வெளியேற்ற ஒரு உபரிநீர்ப்போக்கியும், ஒரு உபரிநீர் வழிந்தோடியும் உள்ளது. இந்த உபரிநீரானது சித்தமல்லி ஓடை வழியாக சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது. தற்போது நடப்பு வடகிழக்கு பருவமழையால் அணை முழு கொள்ளளவை எட்டியது. தற்போது தமிழக முதல்- அமைச்சரின் ஆணையின்படி சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற பிப்ரவரி மாதம் 10-ந் தேதி வரை முறை வைத்து 55 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.

அப்போது கண்காணிப்பு பொறியாளர் வேட்டைசெல்லம், பொதுப்பணித்துறை (நீர்வளஆதாரம்) செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, வேல்முருகன், மருதமுத்து, சதீஸ், ராஜாசிதம்பரம் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story