தேனி, கம்பம் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகம் - வருமானத்தை இழக்கும் தொழிலாளர்கள்


தேனி, கம்பம் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகம் - வருமானத்தை இழக்கும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 19 Dec 2019 10:15 PM GMT (Updated: 19 Dec 2019 3:21 PM GMT)

தேனி, கம்பம் உள்பட பல்வேறு இடங்களில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால், கூலித்தொழிலாளர்கள் வருமானத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

தேனி,

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டுக்கு தடை இல்லை. இதனால், இருமாநில எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

தேனி, கம்பம், கூடலூர், போடி போன்ற பகுதிகளில் கூலித்தொழிலாளர்களை குறிவைத்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போலீசார் அவ்வப்போது சிலரை கைது செய்தாலும், லாட்டரி சீட்டு விற்பனைக்கு முற்றிலும் தீர்வு காண முடியவில்லை. கூலிக்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்கள் பெரும்பாலும் போலீசாரிடம் சிக்கிக் கொள்கின்றனர். ஆனால், கேரள மாநிலத்தில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து சில்லறையில் விற்பனை செய்வதற்கு பின்னணியில் உள்ள வியாபாரிகள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமலும், வியாபாரிகளை பிடிக்க முடியாமலும் போலீசார் திணறி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் லாட்டரி சீட்டு வாங்கி அதில் பரிசு விழுந்தால், சீட்டு வாங்கியவருக்கு நேரடியாக பரிசுத் தொகை வழங்கப்படுவதும் கிடையாது. இதற்காகவே இடைத்தரகர்கள் பலர் கேரள மாநிலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோன்ற இடைத்தரகர்களை அணுகி பரிசுத் தொகையை பெற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு பெறும் போது, லாட்டரி வாங்கியவருக்கு பரிசுத் தொகையில் பாதி தான் கிடைக்கிறது. இருப்பினும், லாட்டரி மோகத்தால் அவற்றை வாங்கி தங்களின் வருமானத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதை முற்றிலும் தடுக்கவும், கேரள மாநிலத்தில் இருந்து லாட்டரி சீட்டுகள் கடத்தி வரப்படுவதை தடுக்கவும் போலீசார் தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story