குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2019 11:15 PM GMT (Updated: 19 Dec 2019 5:42 PM GMT)

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை எதிர்த்து அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய தடியடியில் பலர் படுகாயம் அடைந்தனர்.

திடீர் போராட்டம்

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்திலும் கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தநிலையில் நாகர்கோவிலிலும் நேற்று 2 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது, நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதேபோல் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கலைக்கல்லூரியிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதில் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கண்ணன், மாவட்ட தலைவர் பதில்சிங், மாவட்ட செயலாளர் பிரிஸ்கில், துணை தலைவர் சச்சின் உள்பட ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து போலீசார் மாணவ- மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story