பெண்ணை தாக்கிய விவசாயிக்கு 3 ஆண்டு சிறை நீடாமங்கலம் கோர்ட்டு உத்தரவு


பெண்ணை தாக்கிய விவசாயிக்கு 3 ஆண்டு சிறை நீடாமங்கலம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Dec 2019 10:15 PM GMT (Updated: 19 Dec 2019 7:31 PM GMT)

நீடாமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய விவசாயிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ள சீனிக்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 46). விவசாயி. இவரது வயலில் நடவுப்பணிக்காக அருந்தவபுரத்தை சேர்ந்த விஜி (41) என்பவரிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முன்தொகை கொடுத்துள்ளார். ஆனால் உரிய நாளில் நடவுப்பணி நடைபெறவில்லை.

இதனால் நாற்றுக்கள் வீணாகின. இந்தநிலையில் சம்பவத்தன்று பக்கத்து வயலில் வேலைக்காக வந்த விஜியிடம், தனது வயலில் உரிய நாளில் நடவுப்பணிக்கு வராதது குறித்து கமலக் கண்ணன் கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

3 ஆண்டு சிறை

இதனால் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், விஜியை திட்டியதுடன், தாக்கினார். இதுகுறித்து விஜி, நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ரோஸ்லின் விசாரித்து கமலக்கண்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் கமலக்கண்ணன் அபராதத்தொகையை செலுத்தி ஜாமீனில் வெளிவந்தார். 

Next Story