பெரும்பாலை அருகே பரபரப்பு: மகளை காதல் திருமணம் செய்த வாலிபர் வீட்டுக்கு தீ வைத்த தந்தை கைது


பெரும்பாலை அருகே பரபரப்பு: மகளை காதல் திருமணம் செய்த வாலிபர் வீட்டுக்கு தீ வைத்த தந்தை கைது
x
தினத்தந்தி 20 Dec 2019 10:30 PM GMT (Updated: 20 Dec 2019 8:04 PM GMT)

பெரும்பாலை அருகே மகள் காதல் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபரின் வீட்டுக்கு தீவைத்ததாக மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள சாணாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் சுபா‌‌ஷ் (வயது 22). தொழிலாளி. இதே பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் சத்யா (19). இவர் மேச்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சுபாசும், சத்யாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் பெண் வீட்டுக்கு தெரியவந்ததால் அவர்கள் மகளை கண்டித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது.இதுகுறித்து பெண்ணின் பெற்றோர், பெரும்பாலை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையறிந்த காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு கடந்த 9-ந்தேதி பெரும்பாலை போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது. இதையடுத்து போலீசார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காதல் ஜோடி திருமண வயதை அடைந்ததால் வாலிபருடன் கல்லூரி மாணவியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுபாசின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்து அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தீ விபத்து குறித்து பென்னாகரம் தீயணைப்பு நிலையத்திற்கும், பெரும்பாலை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீ அருகில் உள்ள வீடுகளில் பரவாமல் அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் வீட்டின் உள்ளே இருந்த தட்டு முட்டு சாமான்கள், துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது மகள் காதல் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முருகன், வாலிபரின் வீட்டுக்கு தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலன் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபரின் வீட்டுக்கு மாணவியின் தந்தை தீவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story