புதுக்கோட்டை பகுதியில் குளம்போல் தேங்கிய மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்


புதுக்கோட்டை பகுதியில் குளம்போல் தேங்கிய மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:45 PM GMT (Updated: 23 Dec 2019 7:53 PM GMT)

புதுக்கோட்டை பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த நவம்பர் மாதத்தில் தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால், தற்போது புதுக்கோட்டை நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. மேலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே உள்ள இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. 20 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை மழைநீர் வடியவில்லை. நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால், அதில் பாசி படர்ந்து தற்போது துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது.

தொற்றுநோய் பரவும் அபாயம்

இவ்வாறு தேங்கி நிற்கும் மழைநீரில் அப்பகுதியில் சேரும் குப்பைகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கடிப்பதால், டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதேபோல் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. எனவே இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் ஆங்காங்கே தேங்கி உள்ள மழைநீரை அகற்ற வேண்டும். மேலும் மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story