வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 8,63,935 வாக்காளர்கள்


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 8,63,935 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 23 Dec 2019 11:00 PM GMT (Updated: 23 Dec 2019 8:00 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டார். மாவட்டத்தில் மொத்தம் 8,63,935 வாக்காளர்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2020-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், அரவக்குறிச்சி, கிரு‌‌ஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 2020-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கரூர் 1,12,304 ஆண் வாக்காளர்களும், 1,22,636 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,34,946 வாக்காளர்கள் உள்ளனர்.

அரவக்குறிச்சி 99,699 ஆண் வாக்காளர்களும், 1,06,970 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,06,671 வாக்காளர்கள் உள்ளனர்.

கிரு‌‌ஷ்ணராயபுரம்1,00,578 ஆண் வாக்காளர்களும், 1,04,375 பெண் வாக்காளர்களும், 46 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,04,999 வாக்காளர்கள் உள்ளனர்.

குளித்தலை 1,06,546 ஆண் வாக்காளர்களும், 1,10,777 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,17,329 வாக்காளர்கள் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8,63,935 வாக்காளர்கள் உள்ளனர்.

1,031 வாக்குச்சாவடி மையங்கள்

மேலும் அரவக்குறிச்சி தொகுதியில், 250 வாக்குச்சாவடி மையங்களும், 159 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கரூர் தொகுதியில் 261 வாக்குச்சாவடி மையங்களும், 94 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கிரு‌‌ஷ்ணராயபுரம் தொகுதியில் 253 வாக்குச்சாவடி மையங்களும், 195 வாக்குச்சாவடி அமைவிடங்களும், குளித்தலை தொகுதியில் 267 வாக்குச்சாவடி மையங்களும், 160 வாக்குச்சாவடி அமைவிடங்களும், ஆக மொத்தம் 1,031 வாக்குச்சாவடி மையங்களும், 608 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி வரை வைக்கப்படவுள்ளன.

பெயர் சேர்த்தல்- நீக்கலுக்கு சிறப்பு முகாம்

மேலும் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 22-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம். ஜனவரி 4, 5, 11, 12-ந் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த சிறப்பு முகாம்களிலும் வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கம்செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் இடமாற்றம் உள்ளிட்டவை குறித்த மனுக்களை அளிக்கலாம். மேலும், http://www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் Voter Helpline மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம். எனவே, தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா(கரூர்), குளித்தலை சார் ஆட்சியர் ஷேக்அப்துல்ரகுமான், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் பிரபு உள்ளிட்ட அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story