மணப்பாறையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி


மணப்பாறையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி
x
தினத்தந்தி 23 Dec 2019 10:45 PM GMT (Updated: 23 Dec 2019 8:11 PM GMT)

மணப்பாறையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மணப்பாறை,

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இணையாக திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியிலும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும். குறிப்பாக ஆவாரங்காடு, பொத்தமேட்டுப்பட்டி, செவலூர், கருங்குளம் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் காணும் காளைகளுக்கு 1½ மாதத்துக்கு முன்பே தீவிர பயிற்சி அளிக்கப்படும். அந்த வகையில் மணப்பாறை பகுதிகளில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காளைகளுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் உணவுகளை விட பருத்தி விதை உள்ளிட்ட சத்தான உணவு பொருட்கள் கொடுக்கப்படுகிறது.

நீச்சல் பயிற்சி

மேலும் காளைகளுக்கு நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல் மற்றும் மண்ணை கொம்பால் குத்தி கிளறும் பயிற்சி, அருகில் யாரையும் நெருங்க விடாமல் விரட்டும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மணப்பாறையை அடுத்த செவலூர் பகுதியில் சின்னாக்கவுண்டர் என்பவர் 20-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இந்த காளைகளுக்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை நேற்று காலை சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 1½ மணி நேரத்திற்கும் மேலாக நின்று பார்த்து வியப்படைந்தனர்.

இதுகுறித்து சென்னை திருவேற்காட்டை சேர்ந்த சதீஸ் என்ற இளைஞர் கூறுகையில், நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொலைக்காட்சியில் தான் பார்த்து வருகிறோம். காளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளையும் தொலைக்காட்சியில் தான் இதுவரை பார்த்து இருக்கிறோம். தற்போது முதல் முறையாக நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. இந்த பயிற்சியை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சென்னை வாழ் மக்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டியின் வீரம் குறித்து தெரியவரும் என்றார்.


Next Story