திருமானூர் அருகே அரசு பஸ்சுக்கு தீ வைப்பு; லாரி டிரைவர் கைது


திருமானூர் அருகே அரசு பஸ்சுக்கு தீ வைப்பு; லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 24 Dec 2019 3:04 PM GMT)

திருமானூர் அருகே சுய விளம்பரத்துக்காக அரசு பஸ்சுக்கு தீ வைத்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கீழப்பழுவூர்,

திருச்சி மாவட்டம், லால்குடியில் இருந்து திண்ணக்குளம் வரை தினமும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் இரவு நேரத்தில் மட்டும் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி காந்தி நகர் அருகே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்படும். பின்னர் டிரைவரும், கண்டக்டரும் அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் இரவு முழுவதும் உறங்கி விட்டு மீண்டும் காலை எழுந்து பஸ்சை இயக்குவார்கள்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் பஸ்சை நெல் கொள்முதல் நிலையம் எதிரே நிறுத்திவிட்டு, கண்டக்டர் கிரு‌‌ஷ்ணகுமார் மற்றும் டிரைவர் செந்தில்குமார் ஆகியோர் தூங்க சென்றுவிட்டனர். அதிகாலை 3 மணி அளவில் பஸ் தீயில் எரியும் சத்தமும், நெருப்பின் வெளிச்சமும் பெருமளவில் தெரிந்துள்ளது. உடனே பஸ்சின் கண்டக்டர் ஓடி வந்து பார்க்கையில், பஸ் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆனால் அரியலூரில் இருந்து தீயணைப்பு துறையினர் வர நேரமானதால் பஸ் 90 சதவீதத்திற்கும் மேல் எரிந்து எலும்புக் கூடாக மாறியது.

லாரி டிரைவர் கைது

இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமழபாடி மார்க்கெட் தெருவை சேர்ந்த லாரி டிரைவரான சதாசிவம் (வயது 42) என்பவர் குடியுரிமை சட்டத்தை நான் எதிர்க்கிறேன். அதற்காக அரசு பஸ்சுக்கு தீ வைத்து எரிக்கப்போகிறேன் என சிலரிடையே கூறிவந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சதாசிவத்தை கைது செய்து விசாரித்தனர். அப்போது சுய விளம்பரத்திற்காக அரசு பஸ்சில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக சதாசிவம் ஒப்புக்கொண்டார். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருமானூர் போலீசார் சதாசிவத்தை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story