குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் 45 பேர் கைது


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் 45 பேர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2019 11:00 PM GMT (Updated: 28 Dec 2019 8:28 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தடையை மீறி பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், புரட்சிகர இளைஞர் கழகம், த.மு.மு.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி, அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌‌ஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாரதியார், காந்தி, பெரியார், நேரு உள்ளிட்ட தலைவர்களின் வேடம் அணிந்து பங்கேற்றனர். அப்போது அவர்கள், எல்லோரும் இந்திய மக்கள்..! மக்கள் ஒற்றுமையை காப்போம்..! நாட்டில் மதவெறியை தூண்டாதே..! இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்காதே..! உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு நின்றனர்.

45 பேர் கைது

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென தரையில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி 45 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி நேரு கலையரங்கத்தில் தங்கவைக்கப்பட்டனர். பிறகு மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் ரெஜீஸ் குமார் நிருபர்களிடம் கூறுகையில், மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல்-அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள். அதைப்போல் தமிழ்நாட்டிலும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயார் செய்ய மாட்டோம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும், என்றார்.

Next Story