திருச்சி மாவட்ட 8 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 78.43 சதவீதம் வாக்குப்பதிவு


திருச்சி மாவட்ட 8 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 78.43 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 9:19 PM GMT)

திருச்சி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்காக 8 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 78.43 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தலில் 6 ஒன்றியங்களுக்கு கடந்த 27-ந் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 5 லட்சத்து 20 ஆயிரத்து 522 வாக்காளர்களில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 519 பேர் வாக்களித்திருந்தனர். இது 76.18 சதவீதம் ஆகும்.

அடுத்து 2-ம் கட்டமாக லால்குடி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி, ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவி, கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவி, கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது. 8 ஒன்றியங்களிலும் 7,01,957 பேர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

2 மணி நேரத்திற்கு ஒருமுறை

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, தொடர்ச்சியாக மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக ஓட்டுப்போட்டனர். 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பதிவான வாக்குகள் சதவீதம் வாரியாக வெளியிடப்பட்டது.

அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 14.8 சதவீதமும், 11 மணிக்கு 28.90 சதவீதமும், 1 மணிக்கு 46.50 சதவீதமும், மாலை 3 மணிக்கு 65.20 சதவீதமும் பதிவாகி இருந்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. 8 ஒன்றியங்களில் எவ்வித பிரச்சினையும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. சில வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முடியும் நேரத்திற்கு முன்பாக அதிக வாக்காளர்கள் நின்றதால் அவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு 5 மணிக்கு மேலாகியும் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர்.

78.43 சதவீதம் வாக்குப்பதிவு

ஓட்டுப்பதிவின் முழு விவரங்கள் வெளியாக இரவு 9 மணிக்கு மேல் ஆனது. 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட தேர்தலில் 78.43 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதன் பின்னர் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பெட்டிகள் குமுளூர் அரசு வேளாண்மை பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள வாக்குகள் எண்ணும் மையத்திலும், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குப்பெட்டிகள் கொணலை சூர்யா பொறியியல் கல்லூரி வாக்குகள் எண்ணும் மையத்திலும், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குப்பெட்டிகள் டால்மியாபுரம் மேல்நிலைப்பள்ளி வாக்குகள் எண்ணும் மையத்திலும், முசிறி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குப்பெட்டிகள் முசிறி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்குகள் எண்ணும் மையத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை

தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குப்பெட்டிகள் தோளூர்பட்டி வெற்றி விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வாக்குகள் எண்ணும் மையத்திலும், தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குப்பெட்டிகள் தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குகள் எண்ணும் மையத்திலும், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குப்பெட்டிகள் கரட்டாம்பட்டி ஜெயராம் பொறியியல் கல்லூரி வாக்குகள் எண்ணும் மையத்திலும் மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குப்பெட்டிகள் கோட்டபாளையம் புனித லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குகள் எண்ணும் மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

வாக்குகள் எண்ணிக்கை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக 6 ஒன்றியங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பெட்டிகளும், நேற்று 2-ம் கட்டமாக 8 ஒன்றியங்களில் நடந்து முடிந்த வாக்குப்பெட்டிகளும் திறந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Next Story