2-வது கட்ட தேர்தல் குமரி மாவட்டத்தில் 67.94 சதவீதம் வாக்குப்பதிவு


2-வது கட்ட தேர்தல் குமரி மாவட்டத்தில் 67.94 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 9:25 PM GMT)

2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் 67.94 சதவீதம் வாக்குப்பதிவு ஆனது. பல வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

நாகர்கோவில்,

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-வது கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், ேதாவாளை, கிள்ளியூர், முன்சிறை ஆகிய 4 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 34 ஆயிரத்து 299 வாக்காளர்களும், தோவாளை ஒன்றியத்தில் 46 ஆயிரத்து 403 வாக்காளர்களும், கிள்ளியூர் ஒன்றியத்தில் 47 ஆயிரத்து 515 வாக்காளர்களும், முன்சிறை ஒன்றியத்தில் 1 லட்சத்து 222 வாக்காளர்களும் ஆக மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 439 வாக்காளர்கள் 4 ஒன்றியங்களில் இடம் பெற்றுள்ளனர். இதில் 99 பேர் திருநங்கையர்கள் ஆவர்.

இந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 388 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 65-ம், தோவாளை ஒன்றியத்தில் 83-ம், கிள்ளியூர் ஒன்றியத்தில் 80-ம், முன்சிறை ஒன்றியத்தில் 160-ம் அடங்கும். இதில் 70 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறிப்பட்டு இருந்தன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசாரும், அதிரடிப்படை போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

விறுவிறுப்பாக

இந்த தேர்தலில் 465 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 47 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கும், 50 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 5 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஆக மொத்தம் 567 பதவிக்கு 1,674 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்தே மிகவும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு இருந்தது. குறிப்பாக தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கே வாக்களிக்கும் ஆர்வத்துடன் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த னர். ஆண்கள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்ததை பல வாக்குச்சாவடிகளில் காண முடிந்தது.

மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன்றோரை அவரவர்களுடைய உறவினர்கள் கார் மற்றும் ஆட்டோ போன்ற வாகனங்களில் அழைத்து வந்து வாக்களிக்கச் செய்தனர். அதேபோல் இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் வாக்குச்சீட்டு முறையில் முதல் முறையாக வாக்களிக்கும் ஆர்வத்துடன் வந்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

கிள்ளியூர்

இதேபோல் கிள்ளியூர் ஒன்றியத்தில் கொல்லஞ்சி, நட்டாலம், வாழைத்தோட்டம், மத்திக்கோடு, பாலூர், மிடாலம், முள்ளங்கினாவிளை ஆகிய ஊராட்சிகளில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

9 மணிக்கு பிறகு கூட்டம் குறைந்து ஒவ்வொருவராக வந்து வாக்களித்தனர். சில வாக்குச்சாவடிகளில் வாக்களர்களின் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. கடற்கரை கிராம பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த பல வாக்குச்சாவடிகளில் காலையிலும், பல வாக்குச்சாவடிகளில் மாலையிலும் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

67.94 சதவீதம் வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான மாலை 5 மணி நிலவரப்படி அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 25 ஆயிரத்து 262 வாக்காளர்களும், தோவாளை ஒன்றியத்தில் 35 ஆயிரத்து 818 வாக்காளர்களும், கிள்ளியூர் ஒன்றியத்தில் 30 ஆயிரத்து 84 வாக்காளர்களும், முன்சிறை ஒன்றியத்தில் 64 ஆயிரத்து 41 வாக்காளர்களும் ஆக மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 205 பேர் வாக்களித்தனர். இதன் சதவீதம் 67.94 ஆகும்.

அவர்களில் ஆண் வாக்காளர்கள் 75 ஆயிரத்து 603 பேரும், பெண் வாக்காளர்கள் 79 ஆயிரத்து 542 பேரும், திருநங்கைகள் 60 பேரும் அடங்குவர். நேற்று 4 ஒன்றியங்களில் நடந்த தேர்தலில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவு வாக்களித்திருந்தனர்.

மொத்தம் உள்ள 99 திருநங்கைகளில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் ஒரு திருநங்கையும், தோவாளை ஒன்றியத்தில் 59 திருநங்கைகளும் ஆக மொத்தம் 60 பேர் வாக்களித்தனர். 

Next Story