கத்திரிப்பட்டியில் 2 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு


கத்திரிப்பட்டியில் 2 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 9:49 PM GMT)

அரூர் ஒன்றியம் கத்திரிப்பட்டியில் 2 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியம், சிட்லிங் ஊராட்சிக்குட்பட்டது கத்திரிப்பட்டி கிராமம். இந்த ஊரில் 452 பெண்கள் உள்பட 970 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 27-ந்தேதி நடந்தது.

அப்போது கத்திரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 2 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டில் 9 வேட்பாளர்களுக்கு பதிலாக வேறு ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் 5 வேட்பாளர்களின் சின்னங்கள் மாறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கத்திரிப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் இந்த வாக்குச்சாவடியிலும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அன்று மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவித்தார்.

மறு ஓட்டுப்பதிவு

இந்தநிலையில் கத்திரிப்பட்டி வாக்குச்சாவடியில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மறு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடியில் கம்பாலை, நாட்டான்வலவு, நடுவலவு, கத்திரிப்பட்டி ஆகிய மலைக்கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்.

இதனிடையே நேற்று நடைபெற்ற மறு ஓட்டுப்பதிவின் முடிவில் 2 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 779 வாக்குகள் பதிவாகின. கத்திரிப்பட்டி வாக்குச்சாவடியில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story