புதுச்சேரி-திருவனந்தபுரத்திற்கு 780 கிலோ மீட்டர் பயணம்: ஆட்டோக்களில் தஞ்சைக்கு வந்த வெளிநாட்டினர்


புதுச்சேரி-திருவனந்தபுரத்திற்கு 780 கிலோ மீட்டர் பயணம்: ஆட்டோக்களில் தஞ்சைக்கு வந்த வெளிநாட்டினர்
x
தினத்தந்தி 31 Dec 2019 11:00 PM GMT (Updated: 31 Dec 2019 8:43 PM GMT)

புதுச்சேரியில் இருந்து திருவனந்தபுரம் வரை 780 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோக்களில் பயணம் செல்லும் வெளிநாட்டினர் தஞ்சைக்கு வந்தனர். இவர்கள் பெரியகோவிலை பார்த்து வியந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் தொல்லியல் சிறப்பும், பாரம்பரிய பண்பாடும், வரலாற்று பெருமையும் உடையது. சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்குவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கலைகளான நாட்டியம், இசை, நாடகம், வீணைகள், கலைத்தட்டுகள் செய்வது என பல கலைகளை வளர்த்த நகரமாகும். பெரியகோவில் மட்டுமின்றி அரண்மனை, அரிய நூல்கள் நிறைந்த சரசுவதிமகால் நூலகம், அருங்காட்சியகம், கலைக்கூடம் போன்றவைகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன.

இதனால் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டினர் தஞ்சைக்கு அதிகஅளவில் வருகை தருகின்றனர். விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் இவர்கள் பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் என தங்களுக்கு பிடித்த வாகனங்கள் மூலம் சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். அதன்படி இத்தாலி, நியூசிலாந்து, ஹங்கேரி, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த 15 பேர் புதுச்சேரியில் இருந்து ஆட்டோக்களில் சுற்றுலா பயணத்தை தொடங்கினர்.

பெரியகோவிலை பார்த்து வியப்பு

பல்வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டு தஞ்சைக்கு நேற்றுமுன்தினம் இரவு வந்தனர். தஞ்சையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கிய இவர்கள் நேற்றுகாலை 9 ஆட்டோக்களில் புறப்பட்டனர். முதலில் தஞ்சை பெரியகோவிலுக்கு சென்ற இவர்கள் மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட யுனெஸ்கோ அங்கீகரித்துள்ள தஞ்சை பெரியகோவில் கட்டிட கலை, சிற்பக்கலையின் அதிசயத்தை பார்த்து வியந்தனர். இவர்கள் பெரிய நந்தி, உயரமான மூலவர் கோபுரம், சோழர், நாயக்கர், மராட்டிய மன்னர்கள் காலத்து சிற்பங்களை கண்டு பிரமிப்பு அடைந்தனர்.

மலைகள் இல்லாத தஞ்சையில் கற்களாலேயே கோவிலை கட்டியது எப்படி? என சுற்றுலா வழிகாட்டி அவர்களுக்கு விளக்கி கூறினார். பெரியகோவில் மட்டுமின்றி அரண்மனை, அரிய நூல்கள் நிறைந்த சரசுவதிமகால் நூலகம், அருங்காட்சியகம், கலைக்கூடம் ஆகியவற்றையும் பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் இவர்கள் தஞ்சையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். ஆட்டோக்களை வெளிநாட்டினரேஓட்டி சென்றனர். ஆட்டோக்கள் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்ய டிரைவர்கள், மெக்கானிக் என 8 பேர் வெளிநாட்டினருடன் சென்றனர்.

திருவனந்தபுரத்தில் நிறைவு

இவர்களை வழிநடத்தி சென்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிலி கூறும்போது, 8 நாட்கள் பயணமாக புதுச்சேரியில் தொடங்கியுள்ளோம். மதுரை, ராஜபாளையம், தூத்துக்குடி, கன்னியாகுமரி வழியாக வருகிற 6-ந் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எங்கள் பயணத்தை நிறைவு செய்கிறோம்.

தமிழக மக்களின் பழக்க வழக்கம், அவர்களது உபசரிப்பு பிடித்து இருப்பதால் ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர். ஆட்டோக்கள் மூலம் செல்வதால் தமிழக பாரம்பரியங்களையும், கலாசாரத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. மொத்தம் 780 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். பயணத்தின்போது ஏழை, எளிய மாணவர்களின் படிப்பிற்காக வெளிநாட்டினர் உதவி செய்கின்றனர் என்றார்.


Next Story