ரூ.1¼ கோடி செலவில் நவீனமயமாகும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி


ரூ.1¼ கோடி செலவில் நவீனமயமாகும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
x
தினத்தந்தி 31 Dec 2019 10:30 PM GMT (Updated: 31 Dec 2019 9:09 PM GMT)

ரூ.1¼ கோடி செலவில் திருச்சி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி நவீனமயமாகிறது.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியில் உள்ள டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை நவீனமயமாக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை உள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை மாநகராட்சியில் முன் மாதிரி பள்ளியாக மாற்றும் வகையில் நவீனப்படுத்தப்படுகிறது.

பசுமை பலகைகள்

பள்ளியில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வகுப்பு அறைகள் மற்றும் தலைமை ஆசிரியர் அறையில் ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வகுப்புகளில் கரும்பலகைக்கு பதிலாக பசுமை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளை கவரும் வகையில் பள்ளி கட்டிடத்தின் முகப்பு பகுதியில் ‘அல்கோ பேனல்’ அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் மாணவ-மாணவிகளுக்கு தனி மேஜைகள் மற்றும் இருக்கைகள் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள் மேம்படுத்தப்பட்ட வசதியுடன் அமைக்கப்படுகிறது. இ்ந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடையும். அதன்பின் மற்ற பள்ளிகளையும் இதேபோல நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story