வாக்குப்பெட்டிகள் ஏற்றிச்சென்ற பஸ்சை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம்


வாக்குப்பெட்டிகள் ஏற்றிச்சென்ற பஸ்சை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2020 10:15 PM GMT (Updated: 1 Jan 2020 7:48 PM GMT)

நன்னிலம் அருகே வாக்குப்பெட்டிகள் ஏற்றிச் சென்ற பஸ்சை வழி மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 30-ந் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்துக்கு வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டன. நன்னிலம் அருகே வண்டாம்பாளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பெட்டிகள்ஒரு பஸ்சில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டன. இந்த பஸ் புகலூர் வாக்குச்சாவடி பகுதிக்கு வந்ததும் அந்த பஸ்சில் இருந்து ஒருவர் இறங்கினார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதிகிராமமக்கள் மற்றும் தி.மு.க.வினர் பஸ்சை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய நபர் தேர்தல் ஆணையத்தால் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமிக்கப்பட்ட வீடியோகிராபர் என்று போலீசார் விளக்கம் அளித்தனர். இதையடுத்துபோராட்டம் கைவிடப்பட்டது.


Next Story