நெடுஞ்சாலைத்துறை ஜீப் டிரைவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்


நெடுஞ்சாலைத்துறை ஜீப் டிரைவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2020 10:15 PM GMT (Updated: 3 Jan 2020 1:54 PM GMT)

விபத்து ஏற்படுத்திய நெடுஞ்சாலைத்துறை ஜீப் டிரைவரை கைது செய்யக்கோரி செய்யாறு போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்யாறு, 

செய்யாறு கம்பன் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி கவிதா. கடந்த 1–ந் தேதி கவிதா தனது மகன் லோகேசுடன் (வயது 2) ஞானமுருகன்பூண்டி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். மீண்டும் வீட்டிற்கு செய்யாறு ஆற்றின் பாலத்தில் நடந்து வரும்போது அந்த வழியே வந்த நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஜீப் தாயுடன் நடந்து சென்ற குழந்தை லோகேஷ் மீது மோதிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் லோகேசின் கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகார் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்யக்கோரி செய்யாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் கூறுகையில், புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் போராட்டத்தை கைவிடாமல் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களை போலீசார் வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்திற்குள் இழுத்து சென்று கைது செய்தனர்.

இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story