வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் திருச்சி சிறையில் அடைப்பு


வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் திருச்சி சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 5 Jan 2020 10:15 PM GMT (Updated: 5 Jan 2020 8:15 PM GMT)

திருச்சியில் வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகனை திருச்சி சிறையில் போலீசார் அடைத்தனர். அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

திருச்சி,

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி ரூ.12 கோடியே 31 லட்சம் மதிப்புள்ள 28½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையில் திருவாரூரை சேர்ந்த முருகன், அவரது அக்காள் மகன் சுரேஷ், மதுரையை சேர்ந்த கணேசன், தஞ்சையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதேபோல் இந்த கொள்ளை கும்பலுக்கு கடந்த ஜனவரி மாதம் திருச்சி நெ.1 டோல்கேட் அருகே நடந்த பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக சுரேஷ், கணேசனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். முக்கிய குற்றவாளியான முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர். ஆனால் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்த முருகனை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை. பெங்களூருவில் முருகன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவரை தொடர்ச்சியாக போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

கோர்ட்டில் ஆஜர்

கிட்டத்தட்ட 55 நாட்களுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீசார் முருகனை பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஒருவாரம் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு முருகனை மீண்டும் பெங்களூரு அழைத்து சென்றனர்.

காவலில் விசாரிக்க மனு

இந்தநிலையில் நெ.1 டோல்கேட் அருகே நடந்த பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக முருகனிடம் விசாரணை நடத்த திருச்சி தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். இதற்காக இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீசார் பெங்களூருவில் இருந்து முருகனை நேற்று திருச்சிக்கு அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனர். முருகனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீரங்கம் கோர்ட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) போலீசார் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்போது முருகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story