உடன்குடி அருகே மயக்க நிலையில் மீட்பு: வீட்டில் அடைத்து வைத்து 17 வயது சிறுமி பலாத்காரம் - சூடு வைத்து சித்ரவதை செய்த காதலன் உள்பட 2 பேர் கைது


உடன்குடி அருகே மயக்க நிலையில் மீட்பு: வீட்டில் அடைத்து வைத்து 17 வயது சிறுமி பலாத்காரம் - சூடு வைத்து சித்ரவதை செய்த காதலன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jan 2020 12:00 AM GMT (Updated: 5 Jan 2020 8:48 PM GMT)

உடன்குடி அருகே மயக்க நிலையில் 17 வயது சிறுமி மீட்கப்பட்ட வழக்கில், அவரை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உடன்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும், தன்னுடைய தாயாரை பார்ப்பதற்காக தனியாக புறப்பட்டு சென்றார். பின்னர் கடந்த 3-ந் தேதி இரவில் மயங்கிய நிலையில் இருந்த அந்த சிறுமியை ஆட்டோவில் சொந்த ஊருக்கு அழைத்து வந்த சிலர், அவரது வீட்டின் முன்பு இறக்கி விட்டு சென்றனர். அந்த சிறுமியின் தலைமுடி வெட்டப்பட்டும், உடலில் நகக்கீறல்களும், சிகரெட்டால் சூடு வைத்ததற்கான காயங்களும் இருந்தன.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தந்தை, உடனே அவரை சிகிச்சைக்காக உடன்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

திருச்செந்தூரை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் முருகபெருமாள். இவருடைய மகன் அய்யப்பன் (வயது 20). இவர் திருச்செந்தூரில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். உடன்குடி அருகே சாதரக்கோன்விளையைச் சேர்ந்த நடராஜன் மகன் மணிகண்டன் (23). ஆட்டோ டிரைவர். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

அந்த 17 வயது சிறுமி, உடன்குடியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்துள்ளார். அப்போது சிறுமிக்கும், அய்யப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. அந்த சிறுமியின் தாயார், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். எனவே, சிறுமி தன்னுடைய தந்தையுடன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று சிறுமி தன்னுடைய தாயாரை பார்ப்பதற்காக திருப்பூருக்கு செல்வதாக தந்தையிடம் கூறிச் சென்றார். அப்போது அவருடன் அய்யப்பனும் சென்றுள்ளார். பின்னர் திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அய்யப்பன் திருச்செந்தூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வாடகை வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், அய்யப்பன் தன்னுடைய நண்பரான மணிகண்டனுக்கும் காதலியை விருந்தாக்கியதாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை அய்யப்பனும், மணிகண்டனும் சரமாரியாக தாக்கினர். மேலும் சிறுமியின் உடலில் சிகரெட்டாலும் சூடு வைத்து, அவரது தலைமுடியையும் வெட்டி சித்ரவதை செய்துள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். சிறுமி இறந்து விட்டால், போலீசிடம் சிக்கி கொள்வோம் என்று பயந்த அய்யப்பனும், மணிகண்டனும் கடந்த 3-ந்தேதி இரவில் சிறுமியை அவரது சொந்த கிராமத்துக்கு ஆட்டோவில் அழைத்து சென்று விட்டு வந்தனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அய்யப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். உடன்குடி அருகே வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story