உள்நாட்டு பொருட்களை ஆதரிக்க கோரி போராட்டம் - கோவையில் வெள்ளையன் பேட்டி


உள்நாட்டு பொருட்களை ஆதரிக்க கோரி போராட்டம் - கோவையில் வெள்ளையன் பேட்டி
x
தினத்தந்தி 7 Jan 2020 10:15 PM GMT (Updated: 7 Jan 2020 9:43 PM GMT)

உள்நாட்டு பொருட்களை ஆதரிக்க கோரி போராட்டம் நடத்த உள்ளதாக கோவையில் வெள்ளையன் கூறினார்.

கோவை,

கோவையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆங்கிலேயர்கள் வியாபாரத்திற்காக இந்தியா வந்தனர். பின்னர் அவர்கள் நம்மை அடிமையாக்கினர். அப்போது மகாத்மா காந்தி இந்தியாவில் தயாரிக்கப்படும் உள்நாட்டு (சுதேசி) பொருட்களை ஆதரித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். தற்போது மீண்டும் சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்ற பார்க்கின்றன.

காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளும் செய்த தவறால் தற்போது நாட்டின் பொருளாதாரம் பின்தங்கியுள்ளது. எனவே நாம் உள்நாட்டு பொருட்களை ஆதரிக்க வேண்டும்.

இதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கடந்த 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். மீண்டும் வருகிற 15-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்நாட்டு பொருட்களை ஆதரிக்க கோரி போராட்டங்கள் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது கோவை மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் முத்துராஜ், சுதேசிய வணிகர் சங்க நிர்வாகி கணபதி லிங்கம், முத்துகிருஷ்ணன், சிதம்பரம், கோபாலகிருஷ்ணன், மைக்கேல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story