மனித வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இசை ஊடுருவி நிற்கிறது வெங்கையா நாயுடு பேச்சு


மனித வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இசை ஊடுருவி நிற்கிறது வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 11 Jan 2020 11:00 PM GMT (Updated: 11 Jan 2020 5:39 PM GMT)

மனித வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இசை ஊடுருவி நிற்கிறது என்று தியாகராஜர் ஆராதனை தொடக்க விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தியாகராஜரின் 173-வது ஆராதனை விழா நேற்று மங்கள இசையுடன் தொடங்கியது. தொடக்க விழாவிற்கு தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்றார். விழாவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

காவிரி ஆற்றங்கரையில் தியாகராஜரின் ஆராதனை விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நவீன கால இந்தியாவில் இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளுக்கு நாம் மரியாதை செலுத்தும் சமயத்தில் அவருடைய வாழ்க்கை, அவருடைய பாடல்கள் மற்றும் இணையற்ற மரபை கொண்டாடுகிறோம்.

பழமை வாய்ந்தது

ரோமாபுரி, பாபிலோனியா, கிரேக்கம், எகிப்து போன்ற நாகரீகங்களைப்போல இந்திய நாகரீகம் மிகவும் பழமை வாய்ந்தது. இவற்றில் இந்திய நாகரீகம் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகமே நம் குடும்பம் என்பதையே நம் பண்பாடு குறிப்பிடுகிறது. இந்த கலாசாரம் நமது முன்னோர்களிடம் இருந்து வந்தது.

மற்ற நாடுகளில் கடவுள் ஒருவரே என்கின்றனர். நம் பண்பாட்டில் எவ்வளவோ கடவுள்கள் இருக்கலாம். கோடிக்கணக்கில் கடவுள்கள் இருக்கும் நிலையில் அடுத்து ஒரு கடவுள் வரலாம். அது தவறு ஒன்றும் இல்லை. இதுதான் நமது பண்பாட்டின் சிறப்பு. நமது நாடு உயரிய கலாசாரத்தை கொண்டது. இதுவே நமது நாடு உலக அளவில் புகழ்பெற்று இருப்பதற்கு காரணம்.

இந்தியர்கள்

நமது நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். நாம் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நாட்டின் வளர்ச்சி என்று வரும்போது அனைவரும் ஒரே கட்சியில் நிற்க வேண்டும். நாம் எந்த கட்சியில் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

தாய்மொழியிலேயே கல்வி கற்க வேண்டும். குறிப்பாக பள்ளிக்கல்வியை ஆங்கில மொழியில் கற்பதை விட தாய்மொழியில் கற்பது அவசியம். சிறந்த சிந்தனைகளை தாய்மொழியில்தான் பெறமுடியும். எனவே தாய் மொழியை கைவிடக் கூடாது.

இசை ஊடுருவி நிற்கிறது

இசை மக்களை ஒருங்கிணைக்கிறது. நம்முடைய இசை உலகப் புகழ்பெற்றது இசையில் நாம் கவனம் செலுத்தினால் நம் மனதும் மேம்படும்.

குழந்தைக்கு தாய் பாடும் தாலாட்டில் தொடங்கி வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இசை ஊடுருவி நிற்கிறது. தூய்மையான இசை என்பது நமது ஆன்மாக்களை செம்மை படுத்தக்கூடியது.

மறந்து விடக்கூடாது

நமது கலாசாரத்தின் பன்முக அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில் நமது பள்ளிக்கூடங்களும், கல்வி நிலையங்களும் அதிக முயற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். கதைகளை படிப்பதில் தொடங்கி, பழங்கால இந்தியாவின் கட்டிடக்கலையின் நுணுக்கங்களை அறிவது வரையில் நமது கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களை அறிந்து கொள்வதற்கும் அவற்றில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளவும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தியாக பிரம்ம மகோத்சவ சபை அறங்காவலர்கள் சுரே‌‌ஷ் முப்பனார், சந்திரசேகர மூப்பனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் ஸ்ரீமு‌‌ஷ்ணம் ராஜாராவ் நன்றி கூறினார்.

பஞ்சரத்ன கீர்த்தனை

இதைத்தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வருகிற 15-ந் தேதி(புதன் கிழமை) முக்கிய நிகழ்ச்சியான ஆராதனை விழா நடைபெறுகிறது. அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஆராதனை நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற உள்ளது.


Next Story