மறைமுக தேர்தலில் சேலம் மாவட்ட ஊராட்சி தலைவராக பா.ம.க.வை சேர்ந்த ரேவதி தேர்வு


மறைமுக தேர்தலில் சேலம் மாவட்ட ஊராட்சி தலைவராக பா.ம.க.வை சேர்ந்த ரேவதி தேர்வு
x
தினத்தந்தி 11 Jan 2020 11:00 PM GMT (Updated: 11 Jan 2020 6:44 PM GMT)

சேலம் மாவட்ட ஊராட்சி தலைவராக பா.ம.க.வை சேர்ந்த ரேவதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவர் பதவியை அ.தி.மு.க. பிடித்தது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் 29 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு 2 கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவில் அ.தி.மு.க. 18 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான பா.ம.க. 4 வார்டுகளிலும், தே.மு.தி.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. மீதமுள்ள 6 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று இருந்தன.

இந்தநிலையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மூலம் மாவட்ட ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

2 பேர் போட்டி

அதாவது, தேர்தல் அதிகாரிகளால் வழங்கப்பட்டிருந்த வெற்றி சான்றிதழை மட்டுமே கையில் எடுத்து செல்ல வேண்டும் என்றும், செல்போன், பேனா, சால்வை, இதர ஆவணங்கள் எதுவும் அலுவலகத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் வரும்போது தங்களது கைகளில் கொண்டு வந்திருந்த பொருட்களை உடன் வந்தவர்களிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றதை காணமுடிந்தது.

மொத்தம் உள்ள 29 உறுப்பினர்களில் 3 பேர் மட்டும் மறைமுக தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. அதாவது, 9-வது வார்டு அழகிரி (தி.மு.க.), 11-வது வார்டு சின்னுசாமி (அ.தி.மு.க.), 29-வது வார்டு ராஜா (அ.தி.மு.க.) ஆகிய 3 பேரும் சொந்த காரணங்களால் மறைமுக தேர்தலில் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள 26 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மட்டும் மறைமுக தேர்தலில் பங்கேற்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் 3-வது வார்டில் வெற்றி பெற்ற பா.ம.க.வை சேர்ந்த ரேவதி, தி.மு.க. சார்பில் ஆத்தூரில் 26-வது வார்டில் வெற்றி பெற்ற நல்லம்மாள் ஆகிய 2 பேரும் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டனர்.

மாவட்ட கலெக்டர் ராமன் முன்னிலையில் மறைமுக தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க.வை சேர்ந்த 16 பேர், தி.மு.க.வை சேர்ந்த 5 பேர், பா.ம.க.வை சேர்ந்த 4 பேர், தே.மு.தி.க. ஒருவர் என மொத்தம் 26 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

ரேவதி வெற்றி

மொத்தம் உள்ள 26 வாக்குகளில் பா.ம.க. ரேவதிக்கு 22 வாக்குகளும், தி.மு.க. நல்லம்மாளுக்கு 4 வாக்குகளும் கிடைத்தது. இதனால் மாவட்ட ஊராட்சி தலைவராக பா.ம.க.வை சேர்ந்த ரேவதி மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ராமன் முன்னிலையில் மறைமுக தேர்தல் நடந்தது.

இதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதன் முடிவில், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் 12-வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்த ஏ.ராஜேந்திரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 22 வாக்குகள் கிடைத்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட 19-வது வார்டு உறுப்பினர் தி.மு.க.வை சேர்ந்த கீதாவுக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் துணைத்தலைவர் பதவியை அ.தி.மு.க. பிடித்துள்ளது.

நிர்வாகிகள் வாழ்த்து

முன்னதாக மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பா.ம.க.வை சேர்ந்த ரேவதிக்கு அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவருக்கு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அருள், மாநில துணைத்தலைவர் மு.கார்த்தி, மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், சாம்ராஜ் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு திரண்டிருந்த பா.ம.க.வினருக்கு கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பேட்டி

இதனிடையே, மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரேவதி நிருபர்களிடம் கூறுகையில், சுகாதாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முக்கியத்துவம் அளிப்பேன். எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும், மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது வழிகாட்டுதலின் படி நடப்பேன் என்றார்.

Next Story