திருவொற்றியூரில் பணத்தகராறில் முதியவர் கொலை


திருவொற்றியூரில் பணத்தகராறில் முதியவர் கொலை
x
தினத்தந்தி 11 Jan 2020 10:45 PM GMT (Updated: 11 Jan 2020 7:23 PM GMT)

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலம் அருகே சாலையோரத்தில் வசித்து வந்தவர் கன்னியப்பன்(வயது 78). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாதவன்(55) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களாக பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டைபோட்டு கொண்டதாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மாதவன், முதியவர் கன்னியப்பனை திண்ணையில் இருந்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கன்னியப்பன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோலீசார், கொலையான கன்னியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளி மாதவனை கைது செய்தார்.

Next Story