பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர், துணைத்தலைவர் பதவியை தி.மு.க. பிடித்தது


பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர், துணைத்தலைவர் பதவியை தி.மு.க. பிடித்தது
x
தினத்தந்தி 11 Jan 2020 10:47 PM GMT (Updated: 11 Jan 2020 10:47 PM GMT)

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர், துணைத்தலைவர் பதவியை தி.மு.க. பிடித்தது.

பொங்கலூர்,

பொங்கலூர் ஒன்றியத்தில் மொத்தம் 13 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 10 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 3 இடங்களையும் கைப்பற்றியது. எனவே ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றும் நிலை உருவானது.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 6-வது வார்டில் வெற்றி பெற்ற எஸ்.குமார் ஒன்றியக்குழுத்தலைவருக்கு முன்னிறுத்தப்பட்டார். அவருக்கு கட்சி பாகுபாடின்றி அனைவரும் முழுமனதுடன் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஒன்றியக்குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எஸ்.குமார் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மகேந்திரன் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் 10-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த அபிராமி அசோகன் முன்னிறுத்தப்பட்டார். அவருக்கு போட்டியாக யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் ஒன்றியக்குழு துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.குமார் மற்றும் அபிராமி அசோகன் ஆகிய இருவரையும் தி.மு.க மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநகர் செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ் மற்றும் முக்கிய பிரமுகர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுபோல் பொங்கலூர் ஒன்றியத்தில் மொத்தம் 16 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நேற்று காலை 11 மணிக்கு அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றது. இதில் 10 பேர் ஊராட்சித்துணைத்தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெருந்தொழுவு ஊராட்சித்துணைத்தலைவர் தேர்தலில் இருவர் சரிசமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சிவகாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் போட்டியின் மூலமாக 5 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

Next Story