தமிழகம் முழுவதும், இதுவரையில் 450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு அமைச்சர் தகவல்


தமிழகம் முழுவதும், இதுவரையில் 450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 5:51 PM GMT)

தமிழகம் முழுவதும் இதுவரையில் 450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை நேற்று மாலை வரையில்(நேற்று முன்தினம்) 98.12 சதவீதம் பேர் பெற்றுள்ளனர். இதுவரை பெறாதவர்கள் இன்றும்(புதன்கிழமை), நாளையும்(வியாழக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் வருகிற 21-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் தேவையான மாவட்டங்களில் இதுவரை 450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்படும்.

கலந்தாய்வு கூட்டம்

மேலும் சம்பா அறுவடை தொடங்கிய பிறகு விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் வருகிற 21-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தஞ்சாவூரிலும், மாலையில் திருவாரூரிலும், 22-ந் தேதி(புதன்கிழமை) நாகப்பட்டினத்திலும் நடக்கிறது.

தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. அதனால்தான் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சி மகாபலிபுரத்தில் நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

சப்-இன்ஸ்பெக்டர் கொலை

டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடந்த கூட்டத்தை தி.மு.க. புறக்கணித்து பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, அ.தி.மு.க.வை பொறுத்தவரை இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் உறுதியாக உள்ளது. தி.மு.க. தான் தங்கள் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்கிறது என்றார்.

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு விசாரணை குறித்து கேட்டதற்கு, இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தமிழக போலீசார் திறமையானவர்கள், குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள் என்றார்.

Next Story