அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி குற்றங்களை தடுக்க வேண்டும்


அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி குற்றங்களை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Jan 2020 10:15 PM GMT (Updated: 16 Jan 2020 8:00 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றங்கள் நடப்பதை தடுக்க உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் அறிவுறுத்தினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில், சமீபத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமங்களில் சட்டம்- ஒழுங்கை பராமரித்திட போலீஸ் துறைக்கு உள்ளாட்சி அமைப்பினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றங்கள் நடப்பதை தடுக்க வேண்டும். வழக்குகளில் துரிதமாக துப்புதுலக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், அவ்வப்போது ஆலோசனை மற்றும் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

உறுதி செய்திட வேண்டும்

மோட்டார் வாகன விதிகளை மதித்து நடந்திடும் வகையில், மோட்டார் சைக்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவதையும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதையும் உறுதி செய்திட வேண்டும். போலீஸ் துறையின் சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கென்னடி (பெரம்பலூர்), தேவராஜ் (மங்களமேடு) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story