கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை: விஷம் குடித்த மகனும் சாவு


கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை: விஷம் குடித்த மகனும் சாவு
x
தினத்தந்தி 17 Jan 2020 11:15 PM GMT (Updated: 17 Jan 2020 8:18 PM GMT)

கடையம் அருகே கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருடன் விஷம் குடித்த மனைவி மற்றும் மகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

கடையம், 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சியை அடுத்துள்ள கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 52), மிட்டாய் வியாபாரி. இவருடைய மனைவி லட்சுமி (47). இவர் பொட்டல்புதூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் ஆரோக்கிய ஸ்ரீதர் என்ற மகனும், கல்லூரியில் படிக்கும் ஜோதி என்ற மகளும் உள்ளனர்.

சந்தானம் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரம் சந்தன மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வந்தார். தற்போது கீழஆம்பூரில் புதிதாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 15-ந் தேதி மாலையில் கடன் கொடுத்தவர்கள் சிலர் வீட்டுக்கு வந்து கடனை உடனடியாக திருப்பித்தருமாறு கேட்டு சந்தானம் மற்றும் குடும்பத்தினரிடம் தகராறு செய்தனர். இதில் மனமுடைந்து காணப்பட்ட சந்தானம், லட்சுமி, ஆரோக்கிய ஸ்ரீதர் ஆகிய 3 பேரும் அன்று நள்ளிரவில் விஷம் குடித்தனர்.

நேற்று முன்தினம் அதிகாலையில் 3 பேரும் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தானத்தின் மகள் ஜோதி இதுபற்றி அக்கம்பக்கத்தினரிடம் கூறினார்.

உடனே அவர்கள், 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்தானம் பரிதாபமாக இறந்தார்.

லட்சுமி, ஆரோக்கிய ஸ்ரீதர் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரோக்கிய ஸ்ரீதருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மகனும் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story