குடியரசு தினத்தையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு - 31-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை


குடியரசு தினத்தையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு - 31-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை
x
தினத்தந்தி 20 Jan 2020 10:15 PM GMT (Updated: 20 Jan 2020 9:31 PM GMT)

குடியரசு தினத்தையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் வருகிற 31-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை, 

குடியரசு தினம் வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. குடியரசு தினத்தையொட்டி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து மதுரை விமான நிலையம் உள்பட அனைத்து விமான நிலையங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையத்திற்கு நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மதுரை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் சென்று வருவதற்கு வருகிற 31-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தின் வெளிப்புறம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் இதுபோல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மதுரை மாவட்ட போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு பயணிகள் கொண்டு வருகிற உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

Next Story