நாகர்கோவில் அருகே துணிகரம் முத்தாரம்மன் கோவில் கதவை உடைத்து தங்க நகைகள் கொள்ளை


நாகர்கோவில் அருகே துணிகரம் முத்தாரம்மன் கோவில் கதவை உடைத்து தங்க நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 21 Jan 2020 5:06 PM GMT)

நாகர்கோவில் அருகே முத்தாரம்மன் கோவில் கதவை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி அணிந்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே உள்ள பறக்கையில் இருந்து மணக்குடி செல்லும் மெயின் ரோட்டில் மதுசூதனபுரத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இங்கு பூசாரியாக விஜயகுமார் என்பவர் இருந்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும், கோவில் கதவை பூட்டி விட்டு சென்றார்.

தங்க நகைகள் கொள்ளை

நேற்று அதிகாலை கோவில் நடையை பூசாரி விஜயகுமார் திறக்க வந்தார். அப்போது கோவிலின் மூலஸ்தான கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஊர் தலைவர் வடிவேலுவுக்கு தகவல் கொடுத்தார். அவர் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கோவில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மூலஸ்தானத்திலேயே ஒரு அறை உள்ளது. அதில் உள்ள இரும்பு பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த பட்டுப்புடவைகள், பூஜை பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. அந்த பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி, 2 பவுன் தங்க வளையல்கள், 2 ஐம்பொன் வளையல்கள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. அவை கொள்ளை போனது தெரிய வந்தது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள சுடலை மாட சாமி முன்பு இருந்த அரிவாள், ஈட்டி போன்ற ஆயுதங்கள் அருகில் உள்ள தோட்டத்தில் கிடந்தன.

முகமூடி அணிந்த உருவம்

இந்த கோவிலில் 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு 30 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த வாலிபர் உள்ளே நுழைவதும், அவர் சுமார் ஒரு மணி நேரம் கல், அரிவாள் போன்றவற்றால் கதவு மற்றும் பீரோவை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றதும் பதிவாகி இருந்தது. கைரேகை நிபுணர்கள் வந்து, கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகிறார்கள்.


Next Story