திருப்பரங்குன்றத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி? போலீஸ் விசாரணை


திருப்பரங்குன்றத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 Jan 2020 10:15 PM GMT (Updated: 21 Jan 2020 8:25 PM GMT)

திருப்பரங்குன்றம் தண்டவாளத்தில் கட்டையைப் போட்டு எக்ஸ்பிரஸ், ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் பஸ் நிலையம், தினசரி காய்கறி மார்க்கெட், போலீஸ் நிலையம் மற்றும் கோவிலுக்கு செல்லக்கூடிய பிரதான பாதையாக இங்குள்ள ரெயில்வே கேட் இருந்து வந்தது. ரெயில்கள் வந்து செல்லும் போதெல்லாம் இந்த பாதையில் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நீண்ட காலத்திற்கு பிறகு சமீபத்தில் மேம்பாலம் அமைக்கப்பட் டது.இதனையடுத்து ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. மேலும் ஆட்கள் செல்ல முடியாதபடி பாதையில் குறுக்கே கட்டைகளால்தடுப்பு அமைக்கப்பட்டது. இதனால் திருநகர் ஹார்விப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் மற்றும் பாதசாரிகள் இந்த கேட் வழியாக செல்லமுடியாமல் உயிரை பணயம் வைத்து தண்டவாளத்னத கடந்து சென்று வருகிறார்கள்.

விசாரணை

இந்நிலையில் நேற்று காலை தண்டவாளத்தில் திடீரென்று ஒரு சவுக்கு கட்டை கிடந்துள்ளது. அப்போது ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் வந்த நிலையில் தண்டவாளத்தில் சவுக்குகட்டை கிடந்ததை கண்ட டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தி அந்த கட்டையைதூக்கி ஓரமாக வீசி சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியாண்டி, ஏட்டுக்கள் அருணா, செல்லப்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். தண்டவாளத்தை கடந்து சென்றவர்கள் அந்த வழியாக கட்டையை கொண்டு சென்றபோது கை தவறி விட்டு சென்று விட்டார்களா? அல்லது நகருக்குள் செல்ல வழி இல்லையே என்ற கோபத்தில் ரெயில்வே நிர்வாகத்தை திரும்பி பார்க்க வைப்பதற்காக கட்டை தண்டவாளத்தில் போடப்பட்டதா? அல்லது விஷமிகள் ரெயிலை கவிழ்க்க சதி வேலையில் ஈடுபட்டுள்ளனரா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.


Next Story