விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்


விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Jan 2020 11:05 PM GMT (Updated: 21 Jan 2020 11:05 PM GMT)

விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்,

31-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை விழுப்புரத்தில் நடைபெற்றது.

கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழுப்புரம் ரெயில் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் கல்லூரி மாணவ- மாணவிகள், பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்கள், போலீசார்கள், ஊர்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள் குழுவினர் பலர் கலந்துகொண்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, வாகனங்களில் அதிவேகமாக செல்லக்கூடாது, காரில் பயணம் செய்யும்போது ‘ஷீட்பெல்ட்’ அணிய வேண்டும், ஓடும் பஸ்சில் ஏறக்கூடாது, வளைவில் வாகனங்களை முந்திச்செல்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

இதில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, முத்துக்குமார், முருகவேல், கவின்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story