தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் பாதுகாப்பாக விளங்கும் இயக்கம் அ.தி.மு.க. - வீரவணக்க நாள் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேச்சு


தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் பாதுகாப்பாக விளங்கும் இயக்கம் அ.தி.மு.க. - வீரவணக்க நாள் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேச்சு
x
தினத்தந்தி 26 Jan 2020 10:30 PM GMT (Updated: 26 Jan 2020 6:14 PM GMT)

தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் பாதுகாப்பாக அ.தி.மு.க. இயக்கம் விளங்கி வருகிறது என திருவாரூரில் நடந்த வீர வணக்க நாள் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசினார்.

கொரடாச்சேரி,

திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், கூட்டுறவு சங்க தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து இளைஞர்கள் தங்களை தாங்களே தீக்கிரையாக்கி மொழிக்காக உயிர் தியாகம் செய்த னர். அதன் நினைவை போற்றக்கூடிய நாளாக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தி திணிப்பை எதிர்த்து போராடியதன் காரணமாக, 1967-ல் அண்ணா தலைமையிலான தி.மு.க., ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.

அண்ணா மறைவுக்கு பின்னால் தி.மு.க. 19 ஆண்டு காலம் மட்டுமே ஆட்சியில் இருந்தது. அதே நேரத்தில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அ.தி.மு.க. 29 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தது. இதன் மூலம் மொழி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை அ.தி.மு.க.வால் மட்டுமே நிலைநிறுத்த முடிந்தது.

மக்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் உலக தமிழ் மாநாடுகளை அ.தி.மு.க. நடத்தியது.

அதுபோல் தஞ்சையில் தமிழ்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் பாதுகாப்பான இயக்கமாக அ.தி.மு.க. மட்டுமே விளங்குகிறது.அதனால்தான் அ.தி.மு.க. மக்களுடைய மனதில் நீங்காத இடத்தை பெற முடிந்தது. 9 ஆண்டு காலம் தொடர்கின்ற ஆட்சிக்கு பின்னாலும் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற்றிருக்கிறது. இதுவிரைவில் நடைபெற இருக்கக்கூடிய மீதமுள்ள உள்ளாட்சி தேர்தல்களிலும் முழுமையான வெற்றியை பெற்றுத்தரும். மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்குகின்ற இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் கட்சியாக தி.மு.க. விளங்குகிறது. இதனை மக்கள் நன்கு உணர்ந்து உள்ளார்கள். தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தது மட்டுமல்லாமல், 3-வது முறையாகவும் அ.தி.மு.க.வே ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கட்சியின் அமைப்பு செயலாளர் கோபால், தலைமை பேச்சாளர்கள் நல்லுசாமி, அன்புமுருகன் ஆகியோர் பேசினர். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், ஒன்றிய செயலாளர்கள் சேகர் (கொரடாச்சேரி), ராஜாசேட் (கோட்டூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story