தர்மபுரி அருகே, ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


தர்மபுரி அருகே, ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 26 Jan 2020 10:00 PM GMT (Updated: 26 Jan 2020 11:58 PM GMT)

தர்மபுரி அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப் பட்டதாவது:-

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி அருகே உள்ள இண்டூர் பாவடி தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன்கள் லோகேஷ்வரன்(வயது 10), யுவராஜ் (7). இண்டூர் முன்சீப் தெருவை சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன்கள் ஜெகதீரகுமார் (10), கோகுல் (7). இவர்களில் லோகேஷ்வரனும், ஜெகதீரகுமாரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பும், யுவராஜ், கோகுல் ஆகியோர் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

பள்ளிக்கு விடுமுறை என்பதால் நேற்று மாணவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர். லோகேஸ்வரனும், கோகுலும் ஏரியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கினர். ஜெகதீரகுமார், யுவராஜ் ஆகிய 2 பேரும் தத்தளித்தனர். இவர்கள் 2 பேரின் சத்தம் கேட்டு அங்கு ஆடு, மாடுகள் மேய்த்து கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து ஜெகதீரகுமார், யுவராஜ் ஆகிய 2 பேரையும் மீட்டனர். ஆனால் லோகேஸ்வரன், கோகுல் ஆகியோர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து இண்டூர் போலீசாருக்கும், மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் இறந்த 2 மாணவர்களின் உடல்களையும் பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கிருந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மாணவர்கள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story