கோவா மந்திரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வியாபாரி கைது


கோவா மந்திரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வியாபாரி கைது
x
தினத்தந்தி 1 Feb 2020 11:19 PM GMT (Updated: 1 Feb 2020 11:19 PM GMT)

கோவா மந்திரிக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற மும்பை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

கோவா மாநிலத்தின் பொதுப்பணித்துறை மந்திரிக்கு கடந்த மாதம் செல்போனில் அழைப்பு வந்தது. இதில் பேசிய ஆசாமி, தான் தாதா பேசுவதாகவும், தங்களுக்கு உடனடியாக பணம் தரவேண்டும் என்றும், இல்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக மந்திரி கடந்த மாதம் 21-ந்தேதி பனாஜி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். செல்போன் நம்பர் மூலம் ஆய்வு நடத்தியதில், அந்த மிரட்டல் அழைப்பு மும்பை காந்தி விலியில் இருந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கோவா போலீசார் மும்பை விரைந்தனர். இங்கு நடத்திய விசாரணையில் காந்திவிலி ரகுலீலா வணிகவளாகத்தில் கடை நடத்தி வந்த வியாபாரி மணிஷ் ஷா (வயது40) என்பவர் தான் மிரட்டல் அழைப்பு விடுத்ததும், பல முறை பொதுப்பணித்துறை மந்திரிக்கு அழைப்பு விடுத்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்த னர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவா அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story