தொண்டமாந்துறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி கிராம மக்கள் மனு


தொண்டமாந்துறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 4:46 PM GMT)

தொண்டமாந்துறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி கிராம மக்கள், குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார். இதில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் குன்னம் தாலுகா ஆண்டிக்குரும்பலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் வந்து, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அதில், பரவாய் (மேற்கு) கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜபெருமாள் கோவிலின் மானாவாரி நிலத்தை 40 வருட காலமாக குத்தகைக்கு பயிர் செய்து வருகிறோம். இதுவரை குத்தகை பாக்கி இல்லை. ஆனால் எங்களை கோவில் அதிகாரிகள் குத்தகைதாரராக பதிவு செய்யவில்லை. இதனால் இயற்கை சீற்றத்தால் விவசாய பாதிப்பு ஏற்பட்ட போதும், கடந்த ஆண்டு படைப்புழு தாக்குதலினால் மக்காச்சோளம் பயிர் பாதிக்கப்பட்ட போதும் அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்ததை தொடர்ந்து, குன்னம் தாசில்தார் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், கோவில் தக்கார் எங்களை குத்தகைதாரராக பதிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டார். எனவே கோவில் உயர் அதிகாரியிடம் பேசி எங்களை, கோவில் மானாவாரி நில குத்தகைதாரராக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

இதேபோல் தொண்டமாந்துறை ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் தேவராஜ் தலைமையில் வந்த ஊர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தி வந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் ஒன்றுகூடி, ஆவடிச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் தாலுகா குரும்பலூர் அருகே உள்ள மேட்டாங்காடு நடுத்தெருவை சேர்ந்த ராமசாமி கொடுத்த மனுவில், எனது ஆதார் அட்டையை பயன்படுத்தி, அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு ஆன்-லைன் மூலமாக விண்ணப்பம் செய்தபோது, ஆதார் அட்டையை புதுப்பித்து வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகிய போது, அந்த ஊழியர் ஆதார் அட்டையில் பிழை உள்ளதாகவும், இதற்கு பெங்களூருவில் உள்ள பிராந்திய அலுவலகத்தை அணுகி சரி செய்து கொள்ளுங்கள், என்றும் கூறினார். கல்வியறிவு இல்லாத என்னால் பெங்களூரு சென்று ஆதார் அட்டையில் உள்ள பிழையை திருத்த முடியாது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இங்கேயே எனது ஆதார் அட்டையில் உள்ள பிழையை திருத்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

கொடுமை செய்யும் மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தை சேர்ந்த பிச்சை என்ற மொட்டையன் என்பவர் தனது மனைவியுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

ஹாஜியை நியமிக்க கோரி...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் குதரத்துல்லா தலைமையில் அக்கட்சியினர் வந்து கொடுத்த மனுவில், வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எனவே விசுவக்குடி கிராம மக்களின் வசதிக்காகவும், கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் விசுவக்குடி கிராமத்தை ஊராட்சியாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்ட முஸ்லிம்கள் திருமணம் உள்ளிட்ட சமுதாய விசே‌‌ஷங்களுக்கு திருச்சி, சேலம் போன்ற அரசு டவுன் ஹாஜிக்களை அணுக வேண்டியுள்ளது. இதனால் அங்கு சென்று வர முஸ்லிம்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரசு டவுன் ஹாஜியை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 268 மனுக்களை கலெக்டர் பெற்றார். அவர் அந்த மனுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அவர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், தனி சப்-கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், உதவி இயக்குனர் (மாவட்ட திறன் பயிற்சி) செல்வம் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story