40 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கிடைக்காமல் தவிப்பு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


40 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கிடைக்காமல் தவிப்பு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 9:40 PM GMT)

‘40 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கிடைக்க வில்லை‘ என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், கடந்தமுறை நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் கொடிநாள் வசூல் செய்த அதிகாரிகளில், அதிக தொகை வசூலித்த 39 அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் 2 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

வீட்டுமனை பட்டா

அப்போது, பழனியை அடுத்த பொருந்தல் அருகே உள்ள பெரியம்மாபட்டி, பாலசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் சிலர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், பெரியம்மாபட்டி, பாலசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை வீட்டுமனை பட்டா கிடைக்காமல் தவித்து வருகிறோம்.

எனவே கலெக்டர் தலையிட்டு விரைவில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்களை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் தாலுகா ஐ.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், ஐ.வாடிப்பட்டி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தோம்.

316 மனுக்கள்

இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு எங்கள் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த அதிகாரிகள், விரைவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றனர். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நாங்கள் வசிக்கும் பகுதி, சிலருக்கு தானமாக வழங்கப்பட்ட இடம் என்றும், உடனடியாக குடியிருப்பை காலி செய்யும்படியும் சில அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான எந்த உத்தரவு நகலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே எங்களுடைய இடத்துக்கு விரைவில் பட்டா வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர்களை தொடர்ந்து தாடிக்கொம்புவை அடுத்த மறவப்பட்டி புதூரை சேர்ந்த பிரபாகர் கலெக்டரிடம் அளித்த மனுவில், திண்டுக்கல், வடமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி இன்றி சிலர் மணல் அள்ளிச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். மேலும் கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் மணலை தரமற்ற முறையில் தயாரித்து விற்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேற்கண்ட மனுக்கள் உள்பட 316 மனுக்கள் நேற்று கலெக்டரிடம் அளிக்கப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.



Next Story