80 முறை புகார் கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை மனுக்கள், ஒப்புகை சீட்டுகளை துணியில் கட்டி வந்த முதியவர்


80 முறை புகார் கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை மனுக்கள், ஒப்புகை சீட்டுகளை துணியில் கட்டி வந்த முதியவர்
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 10:28 PM GMT)

80 முறை புகார் கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்கள், ஒப்புகை சீட்டுகளை துணியில் கட்டிக்கொண்டு வந்த முதியவரால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த நிலையில் கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 70 )என்பவர் கழுத்தில் கோரிக்கை மனுக்களை கட்டிக்கொண்டும், துணி ஒன்றில் மனு நகல்கள் மற்றும் ஒப்புகை சீட்டுகளை கட்டிக்கொண்டு வந்தார்.

இதைபார்த்த மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன் மற்றும் போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் இருந்து கோரிக்கை மனுவை வாங்கி அதனை தாசில்தாரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். இது குறித்து பெரியசாமி கூறுகையில், கூத்தக்குடி கிராமத்தில் உள்ள மூப்பனார் கோவில் அருகில் தேர் நிறுத்துவதற்கான இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து கொட்டகை கட்டி பயன்படுத்தி வருகிறார்.

நடவடிக்கை

இதை அகற்ற கோரி கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் 80-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்துள்ளேன். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து அதிகாரியின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மனுக்களின் நகல்கள் மற்றும் மனு அளித்த போது எனக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டுகளை துணியில் கட்டி வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நோய் தாக்குதல்

சங்கராபுரம் அருகே சே‌‌ஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மனைவி, மகனுடன் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை எடுத்து கொண்டு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் கூறுகையில் நோய் தாக்குதலால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.


Next Story