குடும்பத்தகராறில் பெண்ணை கொன்று விட்டு கணவர் தற்கொலை


குடும்பத்தகராறில் பெண்ணை கொன்று விட்டு கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Feb 2020 11:51 PM GMT (Updated: 4 Feb 2020 11:51 PM GMT)

மலப்புரம் அருகே குடும்பத்தகராறில் பெண்ணை கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

பாலக்காடு,

மலப்புரம் அருகே உள்ள கூட்டிலங்காடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 79). இவருடைய மனைவி அம்மணி (68). இவர்களுக்கு சதாசிவன், சுரேந்திரன் என்ற 2 மகன்களும், சுகாசினி, அம்பிகா, அஜிதா என்ற 3 மகள்களும் இருக்கிறார்கள்.

இதில் அம்பிகாவுக்கு மட்டும் திருமணம் ஆகாததால் பெற்றோருடன் வசித்து வந்தார். மற்ற அனைவரும் தனியாக வசித்து வருகிறார்கள். அம்பிகா பொன்னானியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கிருஷ்ணனுக்கும், அம்மணிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்தது.

வெட்டிக்கொலை

நேற்று முன்தினம் காலையில் அம்பிகா வேலைக்கு சென்று விட்டார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணனுக்கும், அம்மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் வீட்டில் இருந்த அரிவாளால் அம்மணியை சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதனால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று கிருஷ்ணன் பயந்தார்.

கழுத்தை அறுத்து தற்கொலை

பின்னர் அவர் வீட்டின் பின்புறம் சென்று தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்ற அம்பிகா மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த போது பெற்றோர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மலப்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியை கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story