கொடைக்கானல் அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்து கேரள தம்பதிகள் உயிர் தப்பினர்


கொடைக்கானல் அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்து கேரள தம்பதிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 5 Feb 2020 12:05 AM GMT (Updated: 5 Feb 2020 12:05 AM GMT)

கொடைக்கானல் அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கேரள தம்பதிகள் உயிர் தப்பினர்.

கொடைக்கானல்,

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் இபின் டேவிட். இவர், தனது மனைவி மற்றும் நண்பர், அவரது மனைவி ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை பார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். காரை, இபின் டேவிட் ஓட்டினார்.

கொடைக்கானலை அடுத்த வெள்ளிநீர்வீழ்ச்சி அருகே மலைப்பாதையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் மலைப்பாதையில் வந்தது. இதனால் பதற்றம் அடைந்த இபின்டேவிட், மோட்டார் சைக்கிள் மீது கார் மோதாமல் இருக்க திருப்பினார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், மலைப்பாதையோரத்தில் இருந்த மின்கம்பத்தை உடைத்து கொண்டு அருகில் இருந்த சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த ஏர்பலூன் திறந்ததால் 2 தம்பதிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மின்கம்பத்தில் கார் மோதியதால் அப்பகுதியில் ½ மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

இதேபோல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தலைமையிலான மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்தனர். மின்கம்பத்தை சேதப்படுத்தியதற்காக காரின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story