குன்றத்தூர் அருகே ரவுடி கொலை வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் 5 வாலிபர்கள் சரண்


குன்றத்தூர் அருகே ரவுடி கொலை வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் 5 வாலிபர்கள் சரண்
x
தினத்தந்தி 5 Feb 2020 8:26 AM GMT (Updated: 5 Feb 2020 8:26 AM GMT)

குன்றத்தூர் அருகே ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர், விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

விழுப்புரம்,

திருநெல்வேலியை சேர்ந்தவர் முருகன் (வயது 32). ரவுடியான இவர் குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலத்தில் வசித்து வரும் தனது மனைவி பாண்டியம்மாளை பார்க்க கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார்.

அப்போது ஒரு மர்ம கும்பல், முருகன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் முருகன் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தங்களை தேடுவதை அறிந்த குன்றத்தூரை சேர்ந்த எஸ்.மணிகண்டன் (25), ஜே.மணிகண்டன் (24), தினே‌‌ஷ்குமார் (25), ஸ்ரீராம் (25), கருணாகரன் (23) ஆகியோர் நேற்று விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் 5 பேரும் விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story