கரூரில் துணிகரம்: விளையாட்டு உபகரண கடை உரிமையாளர் வீட்டில் 49 பவுன் நகை கொள்ளை


கரூரில் துணிகரம்: விளையாட்டு உபகரண கடை உரிமையாளர் வீட்டில் 49 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 6 Feb 2020 11:15 PM GMT (Updated: 6 Feb 2020 4:46 PM GMT)

கரூரில் விளையாட்டு உபகரண கடை உரிமையாளர் வீட்டில் 49 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு கோவை ரோடு வடிவேல்நகரை சேர்ந்தவர் சுரே‌‌ஷ் (வயது 42). இவர், கரூரில் கோவை ரோட்டில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மதுமிதா (36). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை சுரே‌ஷின் மாமியார் அங்கம்மாள் (70) மட்டும் வீட்டில் இருந்தார். மற்றவர்கள் வெளியே சென்றிருந்தனர்.

இந்நிலையில் அங்கம்மாள், வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக பக்கத்து வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டில் ஆள் இல்லாததை அறிந்ததும் சுற்றுச்சுவர் கேட்டினை ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர். பின்னர் ஸ்குரு டிரைவரால் வீட்டின் மரக்கதவினை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அறையில் உள்ள மர அலமாரியை உடைத்து அதில் இருந்த 49 பவுன் நகைகள், 5 காரட் வைர நகைகள் மற்றும் கொலுசு, குத்துவிளக்கு, பாத்திரங்கள் உள்பட வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த அங்கம்மாள் கொள்ளை சம்பவம் நடந்ததை அறியாமல், வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தார்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

அப்போது கடையில் இருந்து வீட்டுக்கு வந்த சுரே‌‌ஷ், கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று அலமாரியை பார்த்தபோது தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசில் மதுமிதா புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் உள்பட போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளையர்களின் விரல் ரேகை எங்கும் பதிவாகியிருக்கிறதா? என்று ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய அந்த நாய் சாலையோரமாக நின்று விட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு

மேலும் சாலையோரமாக மெயின்ரோட்டையொட்டியே வீடு இருப்பதால் அங்குள்ள கடைகள் உள்ளிட்டவற்றில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு, போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது வெள்ளை நிற காரில் வந்த ஒரு கும்பல் சுரே‌‌ஷ் வீட்டு முன்பு இறங்கியதும், அந்த கும்பலே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் வடிவேல் நகர் பகுதியில் அக்கம், பக்கத்தில் போலீசார் விசாரித்தபோது, அங்குள்ள ஒரு அரிசி கடைக்கு முன்னதாக வந்த கொள்ளையர்கள், அங்கிருந்த காசாளரிடம் உங்கள் கடை உரிமையாளருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது உடனடியாக செல்லுங்கள் என்று கூறி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். எனினும் அவர் சுதாரித்து கொண்டு அக்கம், பக்கத்து கடைக்காரர்களை திரட்டியதால் கொள்ளை கும்பல் காரில் அங்கிருந்து தப்பிச்சென்றது.

அதேநேரத்தில் கரூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள ஒரு அரிசி கடையில் ரூ.85 ஆயிரம் திருட்டுேபானதாக கூறப்படுகிறது. அதுவும் சுரே‌‌ஷ் வீட்டில் கொள்ளையடித்த கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சுரே‌‌ஷ் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்று கரூர் டவுன் போலீசார் தெரிவித்தனர்.


Next Story