கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,186 வழக்குகளில் ரூ.6¼ கோடியில் தீர்வு


கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,186 வழக்குகளில் ரூ.6¼ கோடியில் தீர்வு
x
தினத்தந்தி 8 Feb 2020 10:45 PM GMT (Updated: 8 Feb 2020 8:43 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,186 வழக்குகளில் ரூ.6 கோடியே 33 லட்சத்து 4 ஆயிரத்து 412 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

கிரு‌‌ஷ்ணகிரி,

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிரு‌‌ஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங் களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஜி.கலாவதி தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் நீதிபதி அறிவொளி, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, சிறப்பு மாவட்ட நீதிபதி டி.வி.மணி, தலைமை குற்ற வியல் நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி மற்றும் வழக்குகளை நடத்து பவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1,186 வழக்குகளில் தீர்வு

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 அமர்வுகள் அமைக்கப்பட்டு 4 ஆயிரத்து 625 வழக்குகள் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் 1,186 வழக்குகளில் ரூ.6 கோடியே 33 லட்சத்து 4 ஆயிரத்து 412-க்கு தீர்வு காணப்பட்டது.

Next Story