சிங்காரா மின்நிலைய சுரங்கப்பாதையில் இருந்து வெளியேற்றிய தண்ணீரில் வேனுடன் சிக்கிய டிரைவர்


சிங்காரா மின்நிலைய சுரங்கப்பாதையில் இருந்து வெளியேற்றிய தண்ணீரில் வேனுடன் சிக்கிய டிரைவர்
x
தினத்தந்தி 8 Feb 2020 11:30 PM GMT (Updated: 8 Feb 2020 9:22 PM GMT)

மசினகுடி அருகே சிங்காரா மின்நிலைய சுரங்கப்பாதையில் இருந்து வெளியேற்றிய தண்ணீரில் வேனுடன் சிக்கிய டிரைவரை 4 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் மீட்டனர்.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள சிங்காரா பகுதியில் தமிழக மின்வாரியத்தின் நீர்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை வழியாக கொண்டு வரப்பட்டு மசினகுடி அருகே உள்ள ஆச்சக்கரை என்ற இடத்தில் வெளியேற்றப்படுகிறது.

வழக்கமாக மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை இந்த சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படும். இதனால் சுரங்கப்பாதையிலிருந்து தண்ணீர் வெளியில் வரும் இடத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என சிங்காரா மின் வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் வெளியேற்றம்

இருப்பினும், மசினகுடி பகுதியை சேர்ந்த சில வாகன டிரைவர்கள் மின்வாரியத்தின் எச்சரிக்கையை மீறி வாகனங்களை அப்பகுதியில் நிறுத்தி கழுவி வருகின்றனர். இவ்வாறு வாகனங்களை கழுவும் போது சுரங்கப்பாதையில் திடீரென வெளியேறும் தண்ணீரில் சில வாகனங்கள் சிக்கி மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதிக்கு செல்லும் சாலையை மசினகுடி போலீசார் மூடியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மசினகுடியை சேர்ந்த சுரே‌‌ஷ் (வயது 28) என்ற டிரைவர் சுரங்கப்பாதையிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்த சிறிதளவு தண்ணீருக்குள் வேனை நிறுத்தி கழுவி கொண்டிருந்தார். மாலை 4.30 மணியளவில் சிங்காரா மின் உற்பத்தி தொடங்கியதை அடுத்து சுரங்கப்பாதையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அந்த தண்ணீர் சுரங்கப்பாதையிலிருந்து சிறிப்பாய்ந்து வெளியே வந்தது.

டிரைவர் மீட்பு

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் சுரே‌‌ஷ் வேனிற்குள் ஏறி அச்சத்துடன் அமர்ந்திருந்தார். அதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக மசினகுடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் வேனை கயிறு கட்டி மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதிகமான தண்ணீர் வெளியேறியதால் அவரை மீட்க முடியவில்லை.

இதையடுத்து, சிங்காரா மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்பின் மின் உற்பத்தி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதால் சுரங்கப்பாதையில் இருந்து வெளியில் வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. இரவு 8.30 மணியளவில் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து மசினகுடி போலீசார் வேனில் சிக்கி தவித்த டிரைவர் சுரேசை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story