முன்னாள் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


முன்னாள் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 10 Feb 2020 11:00 PM GMT (Updated: 10 Feb 2020 4:41 PM GMT)

முன்னாள் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கவுல்பாளையம் கிராம மக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட கவுல்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில், கவுல்பாளையம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்டவையில் பல லட்சக்கணக்கில் மோசடி செய்த முன்னாள் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கடந்த குடியரசு தினத்தன்று எங்கள் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினோம்.

போலீசாரை கண்டித்து தர்ணா

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், முன்னாள் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது தற்காலிக பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை தமிழ்ச்செல்வன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கவுல்பாளையம் கிராமத்தின் பணிதள பொறுப்பாளர் பரிமளா ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து, உரிய இழப்பீடு தொகையை ஊராட்சிக்கு பெற்று தர வேண்டும்.

ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பயனாளிகள் மற்றும் செலவின பதிவேடுகளை கிராம மக்கள் முன்னிலையில் தணிக்கை செய்ய வேண்டும் என்றனர். மேலும் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து மனு கொடுக்க புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலெக்டரை சந்திக்க வேண்டும் என்றால் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று அவர்களை அறிவுறுத்தினர். இதனால் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரை கண்டித்து பெண்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரை சந்திக்க 10 பேரை மட்டுமே அனுமதித்தனர். அவர்கள் இது தொடர்பான மனுவினை கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்து விட்டு சென்றனர்.

கிராம நிர்வாக அதிகாரி மீது புகார்

சிறுவாச்சூரை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள 3 சுய உதவிக்குழுக்களுக்கு அரசு சார்பில் தலா ஒரு ஏக்கர் நிலம் குத்தகை முறையில் கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த நிலத்தை கிராம நிர்வாக அதிகாரி தனியாருக்கு விற்பதற்கு முயன்று வருகிறார். எனவே கிராம நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து அதனை தடுத்து, எங்களுக்கு அந்த நிலத்தில் இருந்து வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

பணியாளர்கள் மனு

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், குரும்பலூரில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தொடங்கப்பட்டது. அப்போது இருந்தே ஆசிரியரல்லா பணியாளர்களாக 22 பேர் பணிபுரிந்து வருகிறோம். தற்போது எங்கள் கல்லூரி அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசாணையில் முறையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் அவர்கள் சார்ந்த பல்கலைக்கழகங்களின் துறைகள், நிர்வாக பணியிடங்கள் தக்க வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நாங்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறோம். தற்போது வயது முதிர்வுற்றதால் வேறு பணியிடங்களுக்கும் விண்ணப்பம் செய்ய முடியாத சூழலில் இருக்கின்றோம். எங்கள் கல்லூரியில் நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே அந்த பணியிடங்களை எங்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று கூறியிருந்தனர்.

304 மனுக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 304 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். அவர் அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், திட்ட இயக்குனர் தெய்வநாயகி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்துணை கலெக்டர் சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story