மேற்கு தொடர்ச்சி மலையில் தீயை கட்டுப்படுத்துவது எப்படி? வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு சிறப்பு பயிற்சி


மேற்கு தொடர்ச்சி மலையில் தீயை கட்டுப்படுத்துவது எப்படி? வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு சிறப்பு பயிற்சி
x
தினத்தந்தி 11 Feb 2020 10:30 PM GMT (Updated: 11 Feb 2020 8:48 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி தீ பிடிப்பதை கட்டுப்படுத்தவும், முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, புலி, மான் காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. ஏராளமான மூலிகை செடிகளும் உள்ளன. இந்த மலைப்பகுதியில் தீப்பிடித்து எரிவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் ஏராளமான விலங்குகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் மலைப்பகுதியில் தீப்பிடிப்பதை கட்டுப்படுத்தவும், முன்னேற்பாடுகள் குறித்தும் செயல் விளக்க சிறப்பு பயிற்சி முகாம் தாணிப்பாறையில் நடைபெற்றது.

மாவட்ட வன காப்பாளர் முகமது சபா, உதவி வன காப்பாளர் அல்லிராஜ், வனச்சரகர்கள் வேலுச்சாமி, சுப்பிரமணியன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி அலுவலர் முத்துப்பாண்டி, வத்திராயிருப்பு நிலைய அலுவலர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் காட்டுப்பகுதிக்குள் தீப்பிடித்தால் எவ்வாறு அணைக்க வேண்டும், தீப்பரவாமல் இருக்க என்ன வழிமுறைகள் செய்ய வேண்டும் என்பது குறித்து பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது. மலை அடிவாரப்பகுதியில் தீப்பற்ற வைத்து செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் தீயணைப்பு மற்றும் வனத்துறை ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story