நெல்லையில் செல்போன் கடைக்காரர் வீட்டை உடைத்து கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


நெல்லையில் செல்போன் கடைக்காரர் வீட்டை உடைத்து கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Feb 2020 11:15 PM GMT (Updated: 17 Feb 2020 7:22 PM GMT)

நெல்லையில் செல்போன் கடைக்காரர் வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை தச்சநல்லூர் தெற்கு சிதம்பர நகரை சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் சதீஷ் (வயத 35). இவர், நெல்லை சந்திப்பில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 13-ந் தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் நாகர்கோவில் சென்று இருந்தார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை பார்த்து சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைந்து கிடந்தது.

அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. சமையல் அறையில் நகைகள் வைக்கப்பட்டு இருந்த மசாலா டப்பாக்கள் கீழே கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், தங்க வளையல்கள், கம்மல் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் சென்று விசாரணை செய்தனர். சதீஷ் வெளியூர் சென்றதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

இது குறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story