விவசாய நிலத்தில் குழாய் பதிக்க எதிர்ப்பு: சங்ககிரியில் விவசாயிகள் தர்ணா போராட்டம்


விவசாய நிலத்தில் குழாய் பதிக்க எதிர்ப்பு: சங்ககிரியில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2020 11:30 PM GMT (Updated: 18 Feb 2020 8:17 PM GMT)

விவசாய நிலத்தில் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்ககிரி,

கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் தேவன்கொந்தி வரை விவசாய நிலத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் குழாய் மூலம் பெட்ரோல், தாதுபொருட்களை கொண்டு செல்ல உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி சங்ககிரி கோட்டத்திற்கு உட்பட்ட அன்னதானப்பட்டி, கோட்டவருதம்பட்டி, சுங்குடிவருதம்பட்டி, கொடிகாவல், ஒலக்கசின்னானூர், கஸ்தூரிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலத்தில் குழாய் பதிக்க 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சங்ககிரி தாசில்தார் பாலாஜி, ஆட்சேபனை தெரிவித்த விவசாயிகள் அனைவரும் 18-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை 11 மணியளவில் முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள், சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, சங்ககிரி வட்டார விவசாயிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் உள்பட 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்தனர்.

தர்ணா போராட்டம்

பின்னர் உதவி கலெக்டர் அமிர்தலிங்கம், பெட்ரோல் குழாய் பதிப்பு திட்ட தனி துணை கலெக்டர் முத்தரசி ஆகியோர்களிடம் மனு அளித்தனர். அப்போது தாசில்தார் விசாரணைக்கு ஆஜர் ஆக மாட்டோம் எனவும், ஆட்சேபனை மனுக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும், பெட்ரோல் மற்றும் தாதுபொருட்களை கொண்டு செல்ல விவசாய நிலத்தில் குழாய் பதிக்கக் கூடாது, நெடுஞ்சாலை ஓரத்தில் குழாய் அமைத்து கொண்டு செல்லவேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் நாங்கள் கொடுத்த ஆட்சேபனை மனுக்களை சம்பந்தப்பட்ட இருகூர் தேவன்கொந்தி குழாய் பதிப்பு திட்ட தலைவருக்கு அனுப்ப வேண்டும். அதுவரை நாங்கள் இங்கு இருந்து செல்ல மாட்டோம் என்று சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து தனி துணை கலெக்டர் முத்தரசி மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குழாய் அமைக்கும் திட்டம் தொடர்பான ஆட்சேபனை மனு சம்பந்தப்பட்ட திட்ட அதிகாரிக்கு அனுப்புவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story