காரைக்காலில் நேரு மார்க்கெட், ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைவில் திறப்பு அமைச்சர் தகவல்


காரைக்காலில் நேரு மார்க்கெட், ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைவில் திறப்பு அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2020 11:49 PM GMT (Updated: 19 Feb 2020 11:49 PM GMT)

காரைக்காலில் பணிகள் முடிந்த நேரு மார்க்கெட், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விரைவில் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி எம்.எஸ்.பி.லட்சுமி நகரில், மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ், சுமார் ரூ.15.50 கோடி மதிப்பில், 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 2.5 லட்சம்லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவுகொண்ட சேமிப்பு கிணறு, 5 ஆழ் குழாய் கிணறுகள், குடிநீர் பிரதான குழாய், குடிநீர் பங்கீட்டு குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, பொதுப் பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்நாட்டினர்.

தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், பல்வேறு நிதிநெருக்கடி உள்ளிட்ட தடைகள் இருந்தாலும் அந்த தடைகளை தகர்த்தெறிந்து வளர்ச்சித்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் மூலம் சுமார் ரூ.15.50 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் 25 ஆயிரம் பேர் பயனடைவர். ஒப்பந்ததாரர் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

விரைவில் திறப்பு

காரைக்காலில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நேரு மார்க்கெட் வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஆகியவை வெகு விரைவில் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், காரைக்கால் வடக்குத் தொகுதி திருமுருகன் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Next Story