பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் போலீசார் அதிரடி: பெட்டிக்கடைகளில் போதை பொருட்கள் பறிமுதல் 4 பேர் கைது


பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் போலீசார் அதிரடி: பெட்டிக்கடைகளில் போதை பொருட்கள் பறிமுதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2020 11:52 PM GMT (Updated: 19 Feb 2020 11:52 PM GMT)

பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் பெட்டிக்கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட போதைபொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாகூர்,

புதுச்சேரியில் கோவில்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து தெற்குப் பகுதி காவல் நிலையத்திற்குட்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் பல்வேறு பெட்டிக் கடைகளில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது காட்டுக்குப்பம் அருகே சத்தியமூர்த்தி(52) என்பவரது கடையில் போதைப் பொருட்களான சிகரெட், பான் மசாலா, ஹான்ஸ் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கன்னிய கோவிலில் சண்முகசுந்தரம்(52) என்பவரின் கடையில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மளிகைக்கடை

தவளக்குப்பம் பகுதியில் அபிஷேகபாக்கம் டி.என் பாளையம் அருகே உள்ள மளிகை கடையில் தவளக்குப்பம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தமயந்தி(49) என்பவரின் கடையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் பாகூர் மார்க்கெட் வீதியில் உள்ள ஒரு ஸ்டோரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அங்கிருந்து சிகரெட், பான்மசாலா, ஹான்ஸ் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது

இதுகுறித்து கடைக்காரர்களான சத்தியமூர்த்தி, சண்முகசுந்தரம், தமயந்தி, பாண்டியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story